முகச்சவரம் செய்வதால் ஏற்படும் நோய் மற்றும் நரை ஏற்படுதலைத் தவிர்க்க புதிய க்ரீம் ஒன்றை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேதியியல்துறை பேராசிரியர் கண்ணன் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது:
“உலக ஆண் வர்க்கத்தினர் முகச்சவரம் செய்வதற்கு பயன்படுத்தும் சேவிங் கிரீம் மற்றும் நோய் தடுப்பு திரவங்களால் இளமையில் தாடையில் நரைமுடிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வியர்வை வெளியேற்றம் தடைபடுவதால் உடல் வெப்பம் அதிகரித்து நோய்கள் உருவாகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக பல ஆண்டு முயற்சிக்குப்பின் நான் உருவாக்கிய இந்தக் கூழ்மத்தால் (கிரீம்) எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. உணவுக்குப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணை மற்றும் தண்ணீர் கலந்த கலவையே இது.
இக்கலவை முகச்சவர பயன்பாட்டின் போது உராய்வு நீக்கியாக பயன்படுவதால் முகத்தசைகளுக்கு பாதிப்பு இல்லை. இதன் மூலம் பிளேடின் செயல்திறன் பன் மடங்கு அதிகரிக்கிறது. இதனைப் பயன்படுத்துவதால் இளமையில் முகத்தாடை முடிகள் நரைப்பதில்லை. இந்தத் தாவர எண்ணை மற்றும் தண்ணீர் கலந்த கலவையைப் பயன்படுத்துவதால் தனி நபர் சேமிப்பும் அதிகரிக்கும்.
வேதி பொருள்கள் அனைத்தும் முகச்சவரத்திற்குப் பின்னர் கழிவு நீரில் கலப்பதால் நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இந்தப் புதிய தொழில்நுட்ப முறையினால் தயாரிக்கப்பட்ட கூழ்மத்தால் அறவே ஒழிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.